சனி, 23 மார்ச், 2019

வர்க்க போராளி தோழர். எம். முருகையா மறைந்தார் !



BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளரும், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், BSNL தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான அருமைத் தோழர். எம். முருகையா சமீப காலமாக ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவினால், 21.3.2019 மாலை 5.30 மணியளவில் காலமானார் என்ற துயரம் வாய்ந்த செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்!
56 வயதே ஆன தோழர். எம். முருகையா, சாத்தூர் தொலைபேசி நிலையத்தில் பகுதி நேர ஊழியராக 1980- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். துவக்க காலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1988- ஆம் ஆண்டு ஒன்றாக இருந்த NFTE- E 4 லைன் ஸ்டாஃப் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தில் மாநில அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப் படுத்துவதற்கான பல்வேறு இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். பகுதி நேர ஊழியர்களின் சம்பள உயர்வு, பிரேக் மஸ்தூர் நிரந்தரம் மற்றும் பல்வேறு கேஷுவல் லேபர் பிரச்னைகளுக்காக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளைப் பெற்றுத் தந்தார். 1989- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நிரந்தரம் பெற்றார். 1994- ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட இந்திய தொலைதொடர்பு ஊழியர் சங்கம் – ITEU லைன் ஸ்டாஃப் நான்காம் பிரிவு சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 
2001- ஆம் ஆண்டில் உருவான BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில உதவிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு தற்போது வரை செயல்பட்டு வந்துள்ளார். 
1999- ஆம் ஆண்டு துவக்கப் பட்ட தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், 2013- ஆம் ஆண்டு முதல் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மாநில கவுன்சில் உறுப்பினராகவும், தொலைதொடர்பு தோழன் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். BSNL ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். 2013- ஆம் ஆண்டு சென்னை மாநில அலுவலகத்திற்கு மாற்றலாகிச் சென்றார். தேர்வின் மூலம் பதவி உயர்வு பெற்று, JUNIOR ENGINEER கேடரில் இறுதியாகப் பணியாற்றி வந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும், விருதுநகர் மாவட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பணியாற்றியுள்ளார்.
தொலைதொடர்புத் துறையில் சுரண்டப்பட்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டி, சங்கமாக உருவாக்கியதிலும், அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம், பணி நிரந்தரம், ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ. போனஸ், பணித் தன்மைக்கேற்ற ஊதியம், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, நீக்கப் பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு சேர்த்தல் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களிலும், பேச்சு வார்த்தைகளிலும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கேந்திரமான பங்கை ஆற்றினார். இன்றைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட, 37 ஒப்பந்தத் தொழிலாளர்களை நீதிமன்றம் மூலம் நிரந்தரப் படுத்துவதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். 

உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த போதும் 28.1.2019 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர் சம்பள பிரச்னைக்காக சங்கத்தின் பிற தலைவர்களுடன் மத்திய தொழிலாளர் நலத் துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து, கடுமையாக வாதாடினார் என்பதை நினைவு கூர்கிறோம். 
அரசாங்க சட்டங்களிலும், இலாகா விதிகளிலும் ஆழ்ந்த அறிவு, கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை, கனிவான அணுகுமுறை, மாற்றுக் கொள்கையுடையவர்களிடமும் நட்பு என்ற சிறப்புகளுக்கு உரியவர். 
சுரண்டப் படும் தொழிலாள வர்க்கத்திற்காகவும், பொதுவுடைமைக் கொள்கைக்காகவும் உறுதியான போராளியாக வாழ்ந்து மறைந்தார்.
அவரது மறைவு நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
செங்கொடி தாழ்த்தி அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறோம் !
அவரது அர்ப்பணிப்பு உணர்வும், கொள்கைப் பிடிப்பும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும் !
செவ்வணக்கம் தோழர் முருகையா !
அவரது மனைவி திருமிகு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், புதல்வன் பாரதிராஜா, புதல்வி கல்பனா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் நமது சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப் படுகின்றன.

அவரது இறுதி நிகழ்ச்சிகள் சாத்தூரில் 22.3.2019 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக