வியாழன், 11 ஜூலை, 2013

Theekkathir Seithi


ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தம் செய்திடுக - தொலைபேசி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை 





ஈரோடு, ஜூலை 10-தொலை தொடர்புத்துறையில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 4 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.
தொலை தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 4வது மாநாடு ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.தம்பிக்கலையான் மற்றும் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.மணி ஆகியோர் வரவேற்புரையாற்றினர். சங்கத்தின் மாநிலச்செயலாளர் எம்.முருகையா மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்று சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வி.மணியன், எஸ்.என்.இ.ஏவின் கிளைச்செயலாளர் டி.பி.பழனிச்சாமி, மாவட்ட அமைப்புச்செயலாளர் கண்ணுச்சாமி, மற்றும் பி.செல்லச்சாமி, ஜி.ராஜேந்திரன், டி.முருகேசன், என்.சுந்தரம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திபேசினர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.மாரிமுத்து, பிஎஸ்என்எல்யு மாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தமிழ்நாடு தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ 10 ஆயிரம் வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும். கேபிள் தொழில் செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ரகமதுல்லா, மாவட்டச்செயலாளராக பழனிச்சாமி, பொருளாளராக சரவணன், மாவட்ட துணைத்தலைவராக எல்.பரமேஸ்வரன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். ஆர்.கோபால் நன்றி கூறினார்.

வாசகர்கள் கருத்துக்கள்